Friday, December 2, 2011

ஒரு யுகத்திற்கு முந்தைய வார்த்தைகள்

உங்கள் பல்லிடுக்குகள் வழியாய்
இழுத்துப் பிடுங்கப்பட்ட சில வார்த்தைகளில்
உங்களையறியாமல் சில ஜீவன் துடிக்கும்.
சீரற்ற பல பாதைகளிலான இரத்த நாளங்களும்
அப்படியே அள்ளியேற்றுச் செரிக்கும் அவ்வார்த்தைகளை.
உங்களை ஒவ்வாத ஒரு தினத்தை இகழ்ந்து கொண்டும்,
உங்களைப் பகைத்தான்களின் ஒவ்வாத ஒரு தினத்தை
புகழ்ந்து கொண்டும் அவ்வார்த்தைகள்
மெல்ல தன் ஆற்றாமைகளைக் கசிய விட்டபடி
தன் காய் கனிய காலம் காத்துக் கிடக்கும்
கடந்தேறி விட்டவைகளை முற்றுமாய் புறந்தள்ளி விட்டதாயும்
வடுக்கள் உறைந்த பழைய மேனி களைந்து
ஓர் பொலிவு மேனியுடலில் உலாவிக் கொண்டிருப்பதாயும்
மெல்லச் சிலாகித்துக் கொண்டிருப்பீர்கள் எல்லாரிடமும்.
ஒரு பாதி வெளுத்த சூரியனின் ஓர் ஆரம்பப் பகலிலேயோ
அல்லது முற்றுமாய் தன்னைக் கரைத்த
அச்சூரியனின் இறுதி விடைத் தருணங்களிலேயோ
ஏழு மலை மற்றும் ஏழு கடல் தாண்டிச் சேர்த்ததாயும்
அல்லது எம்மனிதப் பதர்களும் அண்டியிராத
ஓர் கோட்டைக் கொத்தளமொன்றில் ஒழித்து வைத்ததாயும்
நீங்கள் நம்பிக் கொண்டிருந்த அவ்வார்த்தைச் சொற்றொடர்கள்
கணப் பொழுதில் உங்களைச் சேரும் அவ்வேளையில்
உங்கள் பொலிவு மேனியுடல் களைந்து
பின்னரும் ஒரு ராட்சஸனாய் உருவேற்றுக் கிடப்பீர்கள்.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

No comments: