Tuesday, November 29, 2011

தலைப்புச் செய்திகள்.

அப்படித்தான் அவர்கள் சொல்லியிருப்பார்கள்

மூத்திரப்பை வழியாய் உயிர் கீழிறங்கி விடுவதுமாயும்

எவ்வுறுப்புக்களுமற்ற வெறும் பிண்டமாய்

மல்லாக்கக் கிடந்து சுவாசித்துக் கிடப்பதுமாய்

பிரகாசித்து ஒளிரும் சூரியப் பகலை

அவ்விஷயங்கள் மட்டுமே குருட்டித்து விடுவதுமாயும்

அவைகளையேற்று உலாவிக் கொண்டிருப்பார்கள்

அறுசுவை உணவுகளற்று அவர்களின் சிறு பெருங் குடல்கள்

அவ்விஷயங்களைக் கொண்டே செரித்துக்கொண்டிருக்கும்

அவர்களையெதிர்ப்பட்ட ஆண் பெண் தலைகளெல்லாம்

அவ்விஷயங்களணிந்து கிடக்கும் தலையேற்றக் கிரீடங்களாய்

உலகளாவிய எவ்விஷயங்கள் எடுத்துரைக்கப்பட்டாலும்

அவவ்விஷயங்களைக் கொண்டே நிறைவு செய்வார்கள்

அவர்களுக்குண்டான ஆர்வ மிகுதிகளை விடவும்

அடுத்த வீட்டொருவனின் துர் மரணத்தை விடவும்

அவ்விஷயங்கள் அதி முக்கியத்துவப்படும் அவர்களுக்கு

அவ்விஷயங்களைக்கொண்டே உடுத்திக் கிழிப்பதுமாய்

அவ்விஷயங்களைக்கொண்டே சுவாசித்துக் கிடப்பதுமாய்

அவ்விஷயங்களைக்கொண்டே அவர்களை அவர்கள்

நிர்மாணித்துக் கிடப்பதுமாய் உருவகப்படுத்திக் கிடப்பர்கள் அவர்கள்

எல்லாம் ஓய்ந்தொழிந்து போன பிந்தைய தினமொன்றில்

நான்கு நாட்களுக்குப் பிந்தைய மூன்றாப் பக்கப் பெட்டிச் செய்தியாய்

வாசலருகே கேட்பாரற்றுக் கிடக்கும் அவ்விஷயங்கள்.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ.

No comments: