Sunday, October 20, 2013



மழை

வீதியில்

பெய்த மழை
வீட்டிலும்
கொஞ்சம் பெய்யும்
ஓட்டை ஒடிசல்
பாத்திரமென்றாலும்
ஒழுகும் இடத்தில்
வைத்துக் கொண்டிருப்பாள் அம்மா
நான் கப்பலுக்காக
காகிதம் தேடுவேன்
ஜன்னலுக்கு வெளியாய்
தன் பிஞ்சுக் கை நீட்டி
மழையைப் பிடிப்பான் தம்பி
அடுக்களையில் அக்கா
அரிசியையோ பட்டாணியையோ
தேடிக் கொண்டிருப்பாள்
இரவு நேர மழைக்கு
இத்தனை ஆர்ப்பாட்டமென்றால்
பள்ளி நேர மழையில்
கண்ணா இரண்டு லட்டு
தின்னும் ஆசைதான்
இப்பொழுதெல்லாம்
வலுத்துச் சூழ்ந்த
செங்கல் சுவர்களில்
கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே
மழை நீர்
திட்டுக்களைப் பார்க்கும் போது
ஏதோ டீவியில்
பெய்வதைப் போல்
தெரிகிறது.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ 


பூட்டு

நன்றாய் திமிறி வளர்ந்த
தாத்தாவைப் போலவே
அத்தனை உறுதியாய்
கதவைக் காத்துக் கிடக்கும்
தாத்தாவின் பூட்டும்
அரை அடி சாவியைச் செருகி
முழுப் பலத்துடன் தாத்தா
மூன்று முறை திருக 
பட்டென்ற பயங்கர ஒலியில்
திறந்து கொள்ளும் பூட்டு
தாத்தா மரித்து சில காலம் வரை
தொங்கிக் கிடந்தது அந்தப் பூட்டு
அதை திறக்கும் ஒவ்வொரு முறையும்
தாத்தாவைக் கடிந்து கொள்வார் அப்பா
பிறகு வீடு மாறிப் போகவே
பூட்டும் மாறிப் போனது
உள்ளங்கையளவு சைனாப் பூட்டில்
சிறுத்த சாவியை இடுகையில்
ஓசையின்றித் திறந்து கொள்ளும்
அந்தப் பூட்டு
எவருமில்லாத ஓர் நாள் பொழுதில்
இப்படித்தான் ஓசையின்றி
சாமான்களை கள்ளன் கொண்டு சென்று விட
மிக நீண்ட தினங்களுக்குப் பிறகு
வாய் திறந்தாள் பாட்டி
அவரு காலத்திலயெல்லாம்
ஒரு குண்டுமணி களவு போயிருக்குமா.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ 


யானை

கணக்கு வாத்தி நம்பிரானை அடுத்து
நான் அதிகம் பயந்ததுஇந்த யானைக்குத்தான்
தெரு முக்கில் நுழையத் தொடங்கும்போதே
யானையென்று கூவத் தொடங்கிவிடுவான்
எதிர் வீட்டு பாபு
ராமு பாபு மூர்த்தி அனைவரும்
யானையை ஒட்டினாற் போலும்
நான் கொஞ்சம் எட்டியும்
நடக்கத் தொடங்கி விடுவோம்
யானையின் பெயர்
அதன் வயது
அது என்ன தின்னும்
அதன் வீடு எவ்ளோ பெருசு என
பாகனை தொணதொணத்தபடி தொடர்வோம்
பத்து பைசா வாங்கி
பாகனிடம் தரும் அழகை
ஒத்தை ரூபாய் தந்தினும்
காணலாமெனத் தோணும்
உள் வாங்கி வெளியடிக்கும்
அத்தும்பிக்கைத் தண்ணிரில்
உயிர் பூத்துக் குலுங்கும்
யானையின் சாணி மிதித்தால்
பள்ளியில் பாஸாகலாம் எனும்
பகட்டுப் புத்திக்காக
சண்டையிட்டெல்லாம் சாணி மிதித்ததுண்டு
நேற்று யானை பார்த்ததாய் மறுநாள்
பள்ளி வரை பெருமை பீற்றுவோம்
இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு ஒன்றென
யானைகள் பொம்மைகளானதில்
யானைக் கொண்டாட்ங்களுக்கு
மவுசுகள் அற்றுத்தான் விட்டன
எப்பொழுதாவது டிஸ்கவரியில் மகனை
அழைத்துக் காட்டிக்கொள்வேன்
இதுதான் யானையென.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ 

டெலிஃபோன்

 ஒரு நாள் ஒட்டடை அடிக்கையில்
 ஒரு ஓரமாய்க் கிடந்த
 பழைய டெலிஃபோன்
தன்னையும் சுத்தப்படுத்தக் கெஞ்சுவதாய் பட்டது
 துடைத்து விட்டு ஒரு எண்ணில் விரலிட்டுச் சுற்றியதும்
கிர்ரென்ற ஒலியில் பழைய நாட்களுள்
தன்னோடு சேர்த்து என்னையும்
அழைத்துச் சென்றது
வீட்டு முற்றத்தின் ஓரமாய்
 ஒரு பொமேரியன் நாய்க்குட்டி போல்
 அத்தனை அழகானதாய் கிடக்கும் அது
 தாத்தா இல்லாத சமயங்களில்
சும்மாவாவது சுற்ற விட்டு
அதன் சப்தம் கேட்பதில் ஓர் அலாதி ஆனந்தம்
 பாட்டி என்னை ஓவராகப் புகாரிட
அதற்கும் பூட்டு வாங்கி வந்துவிட்டார் தாத்தா
டெலிஃபோன் நம்பரை துண்டுச் சீட்டுகளில் எழுதி
 வகுப்பு முழுவதும் விநியோகித்து
 டீச்சரிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட கதையுமுண்டு
ஓய்வின்றி அலறிய அந்த டெலிஃபோன்
ஒருநாள் ஓய்வெடுத்துக்கொள்ள
அந்த இடத்தில் புதிய சிறிய மினுக்கான
 பொத்தான் ரக ஃபோனை வந்து வைத்தார்கள்
 ஏதோ குமரி சிணுங்குவதைப் போல் கொண்ட
அதன் ஒலி அவ்வளவாய் எனக்கு
 இஷ்டப்படவில்லை.


 எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ