Sunday, October 20, 2013



யானை

கணக்கு வாத்தி நம்பிரானை அடுத்து
நான் அதிகம் பயந்ததுஇந்த யானைக்குத்தான்
தெரு முக்கில் நுழையத் தொடங்கும்போதே
யானையென்று கூவத் தொடங்கிவிடுவான்
எதிர் வீட்டு பாபு
ராமு பாபு மூர்த்தி அனைவரும்
யானையை ஒட்டினாற் போலும்
நான் கொஞ்சம் எட்டியும்
நடக்கத் தொடங்கி விடுவோம்
யானையின் பெயர்
அதன் வயது
அது என்ன தின்னும்
அதன் வீடு எவ்ளோ பெருசு என
பாகனை தொணதொணத்தபடி தொடர்வோம்
பத்து பைசா வாங்கி
பாகனிடம் தரும் அழகை
ஒத்தை ரூபாய் தந்தினும்
காணலாமெனத் தோணும்
உள் வாங்கி வெளியடிக்கும்
அத்தும்பிக்கைத் தண்ணிரில்
உயிர் பூத்துக் குலுங்கும்
யானையின் சாணி மிதித்தால்
பள்ளியில் பாஸாகலாம் எனும்
பகட்டுப் புத்திக்காக
சண்டையிட்டெல்லாம் சாணி மிதித்ததுண்டு
நேற்று யானை பார்த்ததாய் மறுநாள்
பள்ளி வரை பெருமை பீற்றுவோம்
இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு ஒன்றென
யானைகள் பொம்மைகளானதில்
யானைக் கொண்டாட்ங்களுக்கு
மவுசுகள் அற்றுத்தான் விட்டன
எப்பொழுதாவது டிஸ்கவரியில் மகனை
அழைத்துக் காட்டிக்கொள்வேன்
இதுதான் யானையென.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ 

No comments: