Sunday, October 20, 2013



பூட்டு

நன்றாய் திமிறி வளர்ந்த
தாத்தாவைப் போலவே
அத்தனை உறுதியாய்
கதவைக் காத்துக் கிடக்கும்
தாத்தாவின் பூட்டும்
அரை அடி சாவியைச் செருகி
முழுப் பலத்துடன் தாத்தா
மூன்று முறை திருக 
பட்டென்ற பயங்கர ஒலியில்
திறந்து கொள்ளும் பூட்டு
தாத்தா மரித்து சில காலம் வரை
தொங்கிக் கிடந்தது அந்தப் பூட்டு
அதை திறக்கும் ஒவ்வொரு முறையும்
தாத்தாவைக் கடிந்து கொள்வார் அப்பா
பிறகு வீடு மாறிப் போகவே
பூட்டும் மாறிப் போனது
உள்ளங்கையளவு சைனாப் பூட்டில்
சிறுத்த சாவியை இடுகையில்
ஓசையின்றித் திறந்து கொள்ளும்
அந்தப் பூட்டு
எவருமில்லாத ஓர் நாள் பொழுதில்
இப்படித்தான் ஓசையின்றி
சாமான்களை கள்ளன் கொண்டு சென்று விட
மிக நீண்ட தினங்களுக்குப் பிறகு
வாய் திறந்தாள் பாட்டி
அவரு காலத்திலயெல்லாம்
ஒரு குண்டுமணி களவு போயிருக்குமா.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ 

No comments: