Wednesday, July 28, 2010

விடுபட்டுப்போன மழை

அறுந்து விழும் நூட்களாய்
அப்பொழுதே ஆர்ப்பரிப்பைத் துவக்கியிருக்கும்
மழைக்கு முந்தைய தூறல்கள்
ஆனால் மனதின் மையப் பகுதியில்
பின்னிப் பிடலெடுத்துக் கொண்டிருக்கும்
ஒரு பெரு மகிழ்ச்சி மழை
விரும்பி ஏற்று உள்ளுக்குறிஞ்சும்
மழைக் காலத்திய மண் வாசனைகள்
கருந்துணியிட்டு மறைத்தாற் போல்
மங்கிய மாலைப் பொழுது
இன்னும் மழை தொடராதாவென்ற
மனம் படர்ந்த ஏக்கத்தில்
ஜன்னலுக்கப்பால் நீண்ட கரங்கள்
குளம் கட்டிய மழை நீரில்
கால் தூக்கிய நடை
அவ்வப்போது உடல் வெடவடத்துச் செல்லும்
காற்றில் கலந்த மிச்சச் சாரல்கள்
மறு நாளைய வெயிலாக்கிரமிப்பு வரை
மனதை விட்டகலாது
மழை நேரத்திய மகிழ்ச்சி
ஓங்கி வலுத்துச் சூழ்ந்த சூளைச் சுவர்களில்
உரத்துக் களைத்த சின்னத்திரைகளில்
விடுபட்டுப் போன மழை நேரத்திய மகிழ்ச்சிக்காக
கொஞ்சம் வருத்தப்பட்டுக் கொள்வதுண்டு
மறு நாள் ஜன்னல் திறக்கையில்.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

No comments: