Wednesday, July 28, 2010

கனவுத் தூதுவன்

கழிந்த எல்லா நாட்களைப் போலவே
குறுகி வளைந்து கரடுமுரடாய்ச் செல்கிறது
என் வழிப் பாதைகள்
மரங்கள் தூவும் மகரந்தப் பூக்களும்
மனம் இளக்கியோடும் மெல்லிய காற்றசைவுகளும்
அவ்வசைவுகள் கொண்டு சேர்க்கும்
பறவைச் சப்தங்களும்
வானச் சூரியனின் விசையழுத்தமற்ற இளஞ்சூட்டுக் கதிர்களும்
பயண வாழ்த்துக்களிடும் பாதை வழியர்களும்
என் பாதை பக்கமும் படுப்பதில்லை
படர்ந்து நீண்ட பிரயாசைப் பிரயாணங்களில்
தனித்துப் போகிறது என் பாதை மட்டும்
இரவு தாண்டிய என் கனவுகள்
என் வழி நோக்கிய பாதைகளிடுகின்றன
என் மனம் ஆட்கொண்ட கனவுத்தூதுவனொருவன்
எனக்குண்டான திசை தீட்டுகிறான்
கழிந்த கால கருமாந்திரங்களைச் சாடியும்
அதைப் போலல்லாதொரு புது விதி தேடியும்
சீரழிந்துச் சிதைப்பட்ட
கதையொன்றைச் சொல்லிச் சொல்லியே
பிரயாசையூட்டுகிறான் அப்பாதை வழி கிளர்ந்தெழ
உருவங்களும் உணர்வுகளுமற்ற அத்தூதுவனின்
வார்த்தைகளற்ற வழி கூறும் அவன் மொழிதல்களில்
எது எப்படி எதற்கென்றறியா ஒரு கரு நோக்கி
சதா ஏற்றத்தில் ஏறிச் செல்கிறது
பின்னடைவுகளுற்ற என் பிரயாணங்கள்.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

No comments: