Saturday, December 17, 2011

ஒவ்வாத நிகழ்வுகள்.

புழுதியடைந்த அத் தெரு மணற்சிறுவர்கள்
உங்களது நிகழ்வுகளை எடுத்து ஓடிக்கொண்டிருப்பார்கள்
அறிந்த அல்லது அறியா ஓர் வாலிபனின் மிதிவண்டிச் சக்கரத்தில்
அந்த நிகழ்வுகள் உருண்டு கொண்டிருக்கும்
தோள் தாங்கிய கைப்பைக்குள்ளே சில்லரைக்குப் பதிலாய்
அந்நிகழ்வுகளைத் தேடிக்கொண்டிருப்பார் நடத்துனர்
உங்கள் வீட்டுக் கொல்லைப் புறத்திலான அப்பூந்தொட்டிக்குள்ளே
அதே நிகழ்வுகள் பூத்துக் கிடக்கும்
உங்கள் விருப்ப ஓர் தொலைக்காட்சி வழியாய்
உங்கள் நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டிருப்பாள் ஓர் பெண்
பெருங்காற்றிறைத்த மணற் துகள்களோடு
அந்நிகழ்வுகள் உங்கள் வாயிலில் இறைந்து கிடக்கும்
நடு நிசி இரவு வாழ் ஜந்துக்களெல்லாம்
அந்நிகழ்வுகளை உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கும்
குழாயடிப் பெண்களும் தங்களுக்குள்ளே
உங்களது நிகழ்வுகளையே உரைத்துக் கொண்டிருப்பார்கள்.
மேல் வானம் பிளந்து கீழ் தரை வெடித்து வெளியேறும்
அம்புலி மாமா வேதாள நிகழ்வுகளைப் போன்றே
சுற்றிய நாற்புறமும் பூதாகரமாய் எழுந்து நிற்கும்
நேற்றைய உங்களின் ஒவ்வாத நிகழ்வுகள்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
sunaithnadwi@gmail.com

No comments: