கொடும் மழையினூடே கரைந்தோடும்
ஆற்றோர மணல் படுகைகளைப் போல்
ஓர் முழு நாளிற்கான மனச் சலனங்களை
கழுவித் தூரெடுக்கும் ஆற்றல் மிக்கதாய்
மாலைத் தேநீர்கள் உருப்பெற்று விடுகின்றன
பின் பிடரி வழியாய் உங்கள் உயிர் குடிக்கும்
சில எம காத உருவங்களையோ
பாத விரல்களினிடையேயான
சேற்றுப் புண் எரிச்சல்களையோ
ஓர் தேநீரின் இதமான கதகதப்பில்
சில மணித்துளிகளாவது அவைகளையற்று
இன்புற்றுக் கிடக்கக்கூடும் நீங்கள்
மென்னிருள் கொண்ட ஓர் பொன் மாலைப் பொழுதோ
எப்பலன்களுமற்ற உங்களையொத்தாருடையேயான
எவ்விஷயங்களுமற்ற வெற்று சம்பாஷனைகளோ
தேநீர்களன்றி சேயில்லா மலடி போல்
நிறைவுறக்கூடும் அவைகள்.
உங்களையும் மீறிய ஓர் கொடுஞ் சம்பவமொன்றில்
நாவிடறும் துர் வார்த்தைப் பிரயோக நிலையில்
உட்கொள்ளுங்கள் ஓர் தேநீரை.
சில நிமிடங்கள் வரையாவது நிறுத்தப்படக்கூடும்
சில துர் நிகழ்வுகள்.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
1 comment:
சில நிமிடங்கள் வரையாவது நிறுத்தப்படக்கூடும்
சில துர் நிகழ்வுகள்
Post a Comment